Friday, November 23, 2007

ஆவியின் அட்வக்கேட் 1

கழுகுத் தொலைக் காட்சியின் "ஆவியின் வழக்கறிஞன்" நிகழ்ச்சி பற்றி ஒரு சின்ன அறிமுகம். இது கொஞ்சம் ஏறுக்கு மாறான நிகழ்ச்சி
ஏனென்றால் இதில் நமது நிருபர் கழுகுக்கு ஆவி பிடித்து விடும். நம்முடைய புலனாய்வு நிருபர் லொடுக்கு அந்த ஆவியிடம் பேட்டி எடுப்பார்.

சரி இன்றைய நிகழ்ச்சிக்கு போகலாமா?
லொடுக்கு பேசுகிறார்:
வணக்கம் நேயர்களே
இன்றைய நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வரும் ஆவி நமது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. முகர்ஜி:

லொடுக்கு: வணக்கம் முகர்ஜி அவர்களே,
கழுகு: வணக்கம் தம்பி.
லொடுக்கு: (தன்னை மறந்து) டேய் மாமா என்னடா குரல் மாறிப் போயிருக்கு?
கழுகு: என்ன தம்பி நான் ஒரு அமைச்சர் இப்படி மரியாதை இல்லாம பேசுறீங்க
லொ: சாரி நீங்க ஆவி-ன்னு மறந்துடுச்சு. ஓ.கே நிகழ்ச்சிக்கு போகலாம்.
லொ:ஐயா முதல்ல நம்ம நாட்டோட அயல் நாட்டுக் கொள்கைய பத்தி சொல்லுங்க

அ: நம்முடைய பெருந் தலைவர்க்ளான நேரு, அன்னை இந்திர ஆகியோர் ஒரு மிகச் சிறந்த அயல் நாட்டுக் கொள்கையை நமக்குத் தந்திருக்கிறார்கள். அதைத் தான் இந்த அரசும் பின்பற்றுகிறது.

லொ: கொஞ்சம் தெளிவா சொல்லுங்க சார்.

அ: நம்முடைய அயல் நாட்டுக் கொள்கை எந்த நாட்டையும் சார்ந்தது அல்ல. எந்த ஒரு நாட்டுடனும் நாம் அணி சேர்ந்து இன்னொரு நாட்டை எதிர்க்க மாட்டோம். எந்த ஒரு சர்வ தேசப் பிரச்சினையயும் நாம் சுயமாகவே முடிவெடுப்போம். வேறு எந்த நாட்டின் நிர்ப்பந்ததுக்கும் அடி பணிய மாட்டோம்.

லொ:(பொதுக் கூட்டத்துல பேசுற மாதிரி ரொம்ப நீளமா பேசுறாரு) ஐயா, அப்போ ஈரானுக்கு எதிரா சர்வ தேச அனு சக்திக் கழகத்துல நாம போட்ட வோட்டு நாமளா எடுத்த முடிவு தானா?


அ:நிச்சயமாக அது நாம எடுத்த சொந்த முடிவு தான்.

லொ: ஐயா ஈரான் ரொம்ப வருஷமா நம்மோட நட்பு நாடு. இப்பவும் நம்மோட எண்ணெய்த் தேவைக்கு நமக்கு ஈரான் தர்ற ஆயில் ரொம்ப முக்கியம். அது மட்டுமில்லாம ஈரான் நம்மோட அணு ஆராய்ச்சி விவகாரத்திலேயோ, நம்மோட காஷ்மீர் விஷயத்துலயோ நம்மோட பிரச்சினை செய்தது கிடையாது. அதுக்கும் மேலா ஈரானோட அனு ஆராய்ச்சி இந்தியாவ எந்த விதத்துலேயும் பாதிக்கப் போறது இல்லை. அப்ப்டி இருக்கறப்போ அந்த வோட்டுப் போட என்ன அவசியம். ஒரு அரசியல்வாதியாவோ அமைச்சராவோ பதில் சொல்லாம ஒரு ஆவியா மனசாட்சியோட பதில் சொல்லுங்க.

அ: சரி, ஒரு அமைச்சரா என்னோட பதில் உனக்குத் தெரியும் "நாட்டுக்கு அருகில் இன்னொரு அனுசக்தி நாடு உருவாகுவதை நம் நாடு விரும்பவில்லை". ஒரு ஆவியா என்னோட உண்மையான பதில், "அமெரிக்காக் காரன் இம்சை பண்ணுறான் தம்பி. ஈரானுக்கு எதிரா வோட்டுப் போட்டாத்தான் அனு சக்தி ஒப்பந்தம் நிறைவேரும்னு கண்டிப்பா சொல்லிட்டான் தம்பி".
நைட்டு ஒரு மணிக்கு தூங்குறவன போன் பண்ணி எழுப்பி கண்டிப்பா வோட்டுப் போடுவீங்கதானேன்னு கேட்டு சாகடிக்கிறான். நானும் எவ்ளோ தான் சமாளிக்குரது நீயே சொல்லு"
(அவருடைய குரலில் வருத்தம் இருந்தது)

லொ: சரி அத விடுங்க சார். இவ்ளோ நாளா நம்மள துளி கூட மதிக்காத அமெரிக்கா அவங்களாவே நம்மளக் கூப்பிட்டு இந்தியா அனு சக்தித் துறையில் உயர்ந்த தொழில்நுட்பங்கள் கொண்ட நாடு அப்பிடி இப்பிடின்னு கதைய விட்டு, நம்ம பிரதமருக்கு அவார்டு எல்லாம் குடுத்து நம்ம தான் வருங்கால வல்லரசு-ன்னு கப்சா எல்லாம் அடிச்சு இந்தியாவுக்கு அணு சக்தித் தொழில் நுட்பமும், அணு உலை போன்ற உயர் தொழில்நுட்பக் கருவிகளும், யுரேனியம் எரிபொருளும் நாங்க குடுத்தே தீருவோம். இதற்காக அமெரிக்க சட்டதிலேயும் மாற்றம் கொண்டு வருவோம். தேவைப்பட்டால் யுரேனியம் சப்ளை செய்யும் நாடுகளுடன் பேசி இந்தியாவுக்கு எரிபொருள் வாங்கித் தருவோம்-ன்னு கண்ணுல கொலை வெறியோட ஜார்ஜ் புஷ் பேசினாரே அதப் பத்தி நீங்க என்ன நெனைக்கிறீங்க?

அ: தம்பி, நாம தான் அடுத்த வல்லரசுங்கற விஷயம் அமெரிக்கா ஒத்துக் கிட்டது ரொம்ப சந்தோஷமான விஷயம். அது மட்டுமில்லாம நாம அணு ஆயுதம் வைத்துள்ள ஒரு பொறுப்பான நாடு. நம்மை ஒரு அணு ஆற்றல் வல்லன்மை கொண்ட நாடாக உலகம் அங்கீகரித்து விட்டதன் அடையாளம் தான் இந்த ஒப்பந்தம். அதனால் தான் அவர்களே வலிய வந்து இந்த ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். இதற்கு முன்பு நம்முடன் எந்த நாடும் அணு சக்தி விஷயத்தில் உறவு வைத்துக் கொள்ளக் கூடாதுன்னு சொன்னதால நம்மோட அணு உலைகல் யுரேனியம் இல்லாம மூட வேண்டிய நிலை வந்தது. இப்போது அவர்களே ஒப்பந்தம் போடுவதால் ரஷ்யா ஃப்ரான்ஸ் போன்ற நமது நட்பு நாடுகளிடம் நாம் அணு மின்சாரத்திற்கு தேவையான எரிபொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

லொ: (மிகவும் கூலாக..) சரி சரி. அமைச்சரா பதில் சொன்னது போதும், மனசாட்சியுள்ள ஆவியா இப்போ பதில் சொல்லுங்க.

அ: (ஒரு பெரு மூச்சுடன்...) தம்பி நம்ம கிட்ட ஒரு கெட்ட பழக்கம் உண்டுப்பா. நம்மளப் பார்த்து யாராவது அடுத்த வல்லரசு நீ தான்யா அப்படீன்னு சொல்லிட்டான்னு வச்சுக்கோங்களேன், அவனுக்காக நாம மட்டையா மடங்கிடுவோம்ப்பா என்னன்னாலும் செய்வோம்ப்பா. ஒரு உதாரணம் சொல்லுறேன். 2002-ல சுனாமி வந்து நம்ம நாட்டுல நெறைய பேரு பாதிக்கப்பட்டாங்க இல்லையா. அப்போ கூட நமக்குத் தான் சேதம் அதிகம். ஆனாலும் நாம பெரிய ஆளுக-ன்னு காட்டுறதுக்காக நாம பாதிக்கப் பட்ட பக்கத்து நாட்டுக்கு உடனே நம்மோட நேவி கப்பல அனுப்பினோம். பாதிக்கப்பட்டவன் எந்த நாடா இருந்தாலும் உதவி செய்வது தப்பில்லை. ஆனா நம்மோட மக்கள் அதிகமா கஷ்டப் படும் போது அதுக்குத் தான் எல்லா உதவியும் பண்ணனும். அத விட்டுட்டு நம்ம மக்களோட வரிப்பணத்துல அழுகிற நம்ம மக்கள விட அடுத்தவனுக்கு குடுத்து வல்லரசுன்னு காட்டுற ஆளுங்க தான்ப்பா நாம. இந்த வீக்னெஸ் எப்படியோ அமெரிக்காவுக்கு தெரிஞ்சு போச்சு. அதான் அவன் நம்மள நல்லா ஏத்தி வுட்டுட்டு, நம்ம பிரதமரக் கூப்புட்டு போய் அவார்ட் எல்லாம் குடுத்து கவுத்திப் புட்டாங்கப்பா. நமக்கு அங்க கெடச்ச மரியாதை எல்லாம் பாக்கும் போது ஆட்டக் குளிப்பாட்டி, மாலை போட்டு, அலங்காரம் பண்ணி குனியச் சொன்ன மாதிரியே ஒரு ஃபீலிங் தம்பி...
சரி மேட்டருக்கு வர்றேன். அவிங்க நம்ம கூட அணு ஒப்பந்தம் போட்டதுக்கு முக்கிய காரணம், நம்ம மேல பாசம் எல்லாம் கெடயாது. அவிங்க நாட்டுல உள்ள அணு சக்திக் கருவிகள் தயாரிக்குற நிறுவனங்களுக்கு அவிங்களோட ப்ராடக்ட் எல்லாம் விக்கிறதுக்கு ஒரு கஸ்டமர் வேனும். நம்மோட எதிர்காலத் திட்டப்படி அணு சக்தி மூலமாத் தான் இன்னொரு 20000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப் போறொம்ங்கிறது ஊருக்கே தெரியும். இந்த வாய்ப்ப அமெரிக்கன் கம்பெனிகள் எல்லாம் பயன்படுத்டுறதுக்காகத் தான் இந்த ஒப்பந்தம். இத வச்சு அமெரிக்காவுக்கு நாலு போனஸ் தம்பி. 1. ஈரான் கூட நாம போடவிருந்த பைப் லைன் திட்டத்தைக் கிட்டத்தட்ட முடக்கிட்டாங்க. 2. அமெரிக்காவுக்கு ஜூனியர் பார்ட்னரா அல்லது ஒரு அடியாளா சைனாவ இந்தப் பகுதியில எதிர்க்க நாம யூஸ் ஆயிட்டோம்.
3. கூடிய சீக்கிரம் அமெரிக்காவுல நடக்கப் போற அதிபர் தேர்தல்ல புஷ் இத சாக்கா வச்சு இந்தியர்களோட வோட்டக் கவர் பண்ணிடுவாரு.
4. நம்மளோட அணு மின்சார நிலயங்களை சர்வ தேச அணு சக்திக் கழகத்தின் ஆய்வுக்கு அனுமதிக்க வைத்தது. (இந்த ஒப்பந்தம் ரத்து ஆனால் கூட அவர்கள் ஆய்வு தொடர்ந்து இருக்கும்)
கொஞ்சம் தண்ணி குடுங்க தம்பி.

அப்போது ஒரு தட்டில் ரெண்டு கப் தண்ணிய எடுத்துக்கிட்டு கழுகு TVயில வேலை பார்க்கிற ஒரு சேலை கட்டிய பொண்ணு எடுத்துக் கொண்டு வர, அவளை "குஷி ஜோதிகா" போர்ஷனில் பார்த்த லொடுக்கு அமைச்சரிடம் "சார், பெண்கள் இடைத் தேர்தலில் 24 இன்ச் இட ஒதுக்கீடு தர்றது பத்தி என்ன நெனைக்கிறீங்க" என்று உளர,
கன்ட்ரோல் ரூமில் இருந்த நிகழ்ச்சி இயக்குனர் சப்பாத்தி கேமரா வை நிறுத்தினான்.
பின்பு அஙிருந்த குயிலிடம் "டேய் லொடுக்கு இருக்கும் போது தண்ணி குடுக்க எதுக்குடா அந்தப் புள்ளைய அனுப்பின. இப்போ பாரு அந்த நாயி அவளோட இடுப்பு சைஸ வச்சு இட ஒதுக்கீடு லெவல்ல பேசுறான். 33 சதவீத இட ஒதுக்கீட்ட 24 இன்ச்சா மாத்திட்டான்."
"டேய் ஆனந்த் மாடசாமி, இந்த வார எபிசோட் இத்தோட முடிஞ்சுது. அடுத்த எபிசோட் அடுத்த வாரம்ன்னு நிகழ்ச்சிய முடிச்சுடு டா"

மீதமுள்ள பேட்டிய அடுத்த வாரம் பார்க்கலாம் நேயர்களே..

No comments: