Wednesday, January 23, 2008

A Long Day Part - 1)

அன்று ஏப்ரல் 29, 2004 அதிகாலை 05:30 மணி……அந்த அதிகாலை நேரத்திலும் திருச்செந்தூர் சற்றே சுறுசுறுப்புடன் தான் இருந்தது. புளியடித் தெருவின் நடுவில் உள்ள அந்த வீட்டின் மாடியில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. முத்துவேல் ஆகிய நான் நிதானமாக என்னுடைய T-ஷர்ட்டை அணிந்து கொண்டிருந்தேன். பின்னாலே திரும்பிப் பார்த்தேன். சந்துரு நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். கூடவே ரொனால்ட், ராமலிஙக்ம், ஜெஃப்பர்ஸன் அனைவருமே தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தனர். பாவம் இன்று இறுதித் தேர்வு. அனேகமாக நள்ளிரவு தாண்டி மூன்று மணிக்குத் தான் படுத்திருப்பார்கள். சந்துரு தவிர மற்ற் அனைவருக்குமே இன்று உச்சிக்குப் பிறகு அரியர் தேர்வும் இருந்தது. அதற்கும் சேர்த்து சந்துரு சொல்லிக் கொடுத்திருப்பான்.

அவனை எழுப்ப வேண்டாம். ஆனால் தேர்வு நேரம் தவிர இவனை விட்டு நான் தனியே ஜாகிங் சென்றது கிடையாது. அவன் முகத்தையே சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்தேன். இவன் மட்டும் இல்லையென்றால் நான் இந்த அறையில் தங்கியிருப்பதோ அல்லது நான்காம் ஆண்டு படிப்பைத் தொடர்ந்திருப்பதோ, என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. ஆனால்... இன்று எங்கள் கல்லூரி வாழ்வின் இறுதி நாள்.
ஒரு பெருமூச்சுடன் விளக்கை அணைத்துவிட்டு வெளியே வந்தேன். ஓரளவு வெளிச்சம் இருந்தது. ஏப்ரல் அல்லவா, சீக்கிரமே விடிய ஆரம்பித்திருந்தது. புளியடித் தெருவைக் கடந்து சன்னதித் தெருவுக்குள் நுழைந்தேன். எதிரில் மீனா அக்கா வந்து கொண்டிருந்தார். அதே புன்னகை மாறாத முகம். சன்னதித்தெருவில் நிறைய மடங்கள் உண்டு. அவற்றில் இரண்டு மடங்களில் அதிகாலையிலேயே சென்று கழுவி தூய்மையாக்குவது அவருடைய அன்றாடப் பணி.
அவருக்கே உரிய அன்பான குரலில் கேட்டார் "இன்னைக்கு எத்தனை பேருக்கு சாப்பாடு வேணும் தம்பி?"
"5 பேருக்குக்கா" என்றேன்.

பின்னர் தயங்கியபடி "அக்கா நான் நாளைக்கு காலைலயே கிளம்பிடுவேன், சந்துரு நாளை மறு நாள் கிளம்புவான், கணக்குப் பார்த்து மொத்தம் எவ்வளவுன்னு அவங்கிட்ட சொல்லிடுங்க" என்றேன்.

நாங்கள் இந்த அறையில் தங்கிய இந்த ஒரு ஆண்டு முழுவதும் மீனா அக்கா தான் காலைச் சாப்பாடு கொண்டு வருவார். மாத இறுதியில் பணம் கொடுக்க வேண்டும். நாங்கள் இதுவரை ஒரு மாதம் கூட சரியான நேரத்தில் கொடுத்தது கிடையாது. இருந்தாலும் அவர் ஒரு முறை கூட முகம் சுளித்துப் பேசியது கிடையாது. அவரிடம் விடைபெற்றுக் கொண்டேன்.

சன்னதித் தெருவில் சில தூரம் சென்று பின்பு வடக்குப் பக்கம் விலகி காவலர் குடியிருப்பை நோக்கிச் சென்றேன். அங்கு இரண்டாவது தெருவின் முதல் வீடு நன்பன் ஈஸ்வரனின் வீடு. வீட்டில் விளக்கு எரியவில்லை. முற்றம் தெளிக்கப்பட்டிருந்தது. அம்மா பால் வாங்கச் சென்றிருக்கலாம். வீட்டின் வாசலில் செருப்பைக் கழற்றி விட்டு, வீட்டின் தாழ்வாரத்தில் இருந்த என்னுடைய ஷூ-வை எடுத்து அணிந்து கொண்டேன். நேராகக் கடற்கரையை நோக்கி நடந்தேன். கடற்கரையில் மிதமான வேகத்தில் ஜாகிங் ஆரம்பித்தேன். மணி 5:55 ஆகியிருந்தது.

ஞாயிற்றுக் கிழமை தவிர எல்லா நாளுமே நானும் சந்துருவும் இங்கு ஓடுவோம். இங்கிருந்து கரையில் ஓடி ஆர்ட்ஸ் காலேஜ் தாண்டி வீரபாண்டியபட்டிணம் வரை ஓடுவோம், பின்னர் அதே வேகத்தில் திரும்பி வர வேண்டும். திரும்பி வரும் போது கடைசி நூறு மீட்டரை கூடுதல் வேகத்தில் கடக்க வேண்டும். பல முறை அந்த இறுதி 100மீ தூரத்தில் சந்துரு என்னை முந்தியிருக்கிறான். ஏனோ எல்லாம் நினைவுக்கு வந்தது. இந்தக் கடற்கரையில் இதுவே கடைசி ஜாகிங்.
வீரபாண்டியபட்டிணம் வரை போய் திரும்பி வந்தேன். கடைசி 100மீ எப்போதும் போல் வேகமாய் ஓடினேன். விரைவான ஓட்டமும், காலை வெயிலும் முகத்தில் முத்து முத்தாய் வியர்வைத் துளிகளை வழியச் செய்தன. ஈஸ்வரன் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். ஷூ-வைக் கழட்டி விட்டு உள்ளே நுழைந்தேன். ஈஸ்வரனும் நானும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அம்மா வந்து கேட்டார், "ரூம எப்படா காலி பண்ணுறீங்க?"
"நான் நாளை கிளம்பறேன்மா" என்றேன்.
"எங்கே ஊருக்காடா?"
"இல்லம்மா, நாளைக்கு சாயுங்காலம் முத்துநகர்-ல சென்னை போறேன்மா"
"போயி எங்கேடா தங்கப் போற?"
"நம்ம சந்துருவோட அண்ணன் சென்னைல ரூம் எடுத்துத் தங்கியிருக்கார்மா, அங்க தான் தங்கப் போறேன்"
"முத்துநகர்-ல டிக்கெட் கெடச்சுருச்சாடா?"
"இல்லம்மா, டிக்கெட் எல்லாமே புக் ஆயிடுச்சு, அதனால அன்-ரிசர்வ்ட்-ல தான் போறேன்மா"
நான் சொல்வது பொய் என்று அவருக்கு நல்லாவே தெரியும், நான் அன்-ரிசர்வ்ட்-ல போறதுக்குக் காரணமும் தெரியும்."சரிம்மா, நேரம் ஆயிடுச்சி, எக்ஸாமுக்குப் போகனும், நான் வர்றேன்மா"
விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன்.

வீட்டுக்கு வந்த போது மணி சரியாக 07:00.
ராம் மட்டும் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தான்.
சந்துரு கேட்டான்,"டீ குடிச்சுட்டு வரலாமாடா?"
சரி என்று சொல்லிவிட்டு ராமையும் எழுப்பினேன்.
எல்லாரும் கிளம்பி அரட்டை அடித்துக் கொண்டே டீ குடித்து விட்டுத் திரும்பிய போது மணி 07:25 . வழக்கமாக டீ குடிக்கப் போகும் போது எங்களிடம் இருக்கும் உற்சாகம் ஏனோ இந்த முறை அரட்டையின் போது குறைந்திருந்தது.

வீட்டு சொந்தக்காரர் கீழேயிருந்து அழைத்தார், "முத்துவேல், உனக்கு ஃபோன்"
கீழே போனேன். என் தங்கை தான்.
பேசிவிட்டு மேலே சென்றேன். சந்துருவின் பார்வையில் இருந்த கேள்வி புரிந்தது.
"தங்கச்சி தான்டா, அப்பா 1000 ருபாய் குடுத்தாராம், அத இன்னிக்கு
11:00 மணிக்கு ஐஸ் வீட்டுல குடுத்துடுவாளாம்", என்றேன்.
"நல்ல வேளை, உங்கப்பா இப்பவாவது மனசு மாறினாரே" என்றான். அவன் முகத்தில் ஒரு நிம்மதிப் பெருமூச்சு….

பாகம் இரண்டில் தொடரும்.....

Sunday, January 20, 2008

Evolution Vs Mutation

இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே எழுதப்பட்டது...



நேற்று வழக்கம் போல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். (சமையல் தாங்கோ...) அப்போது குயில் என்னை அலைபேசியில் அழைத்தான். சிறிது நேரம் நலம் விசாரித்து விட்டு அந்த சந்தேகத்தைக் கேட்டான்.
"மாம்ஸ், ம்யூட்டேஷனுக்கும்(Mutation) எவோலுஷனுக்கும் (Evolution) என்னடா வித்யாசம்"

"திடீர்னு ஏன்டா இந்தக் கேள்வி" நான் கேட்டேன்.

"இல்ல மாமா, எங்கேயோ படிச்ச ஞாபகம், உனக்குத் தெரிஞ்சா சொல்லேன்டா"

"சரிடா உனக்கு ஒரு உதாரணத்த வச்சு சொல்லுறேன், புரியுதான்னு பாரு"
"சரி சொல்லு மாம்ஸ்"

“உனக்கு நம்ம குடிகாரன் ஞாபகம் இருக்கு இல்லையா, அவனப் பாரு, ஃபர்ஸ்ட் இயர்ல ரொம்ப அப்பாவியா ஒரு சோடா புட்டி கண்ணாடியப் போட்டுக்கிட்டு சிரிச்சுக்கிட்டு அலைவான். அந்த சமயத்துல அவன் இந்த அளவுக்கு மோசமா வருவான்னு யாரும் துண்டப் போட்டு தாண்டினாலும் நாம நம்பியிருப்போமா? ஆனா இப்போ உண்மையக் கண்ணால பாக்கிறோம், இதுக்குப் பேரு தான் எவோலுஷன். ரொம்ப ரொம்ப மெதுவா நடந்தது இல்லையா அவனோட மாற்றாம், அது மட்டுமில்லாம அவன் என்னைக்கு இப்படி மாறினான்னு யாராலயும் சொல்ல முடியாது
உயிர் நன்பனோட அப்பா இறந்ததுக்குக் கூட அவன் வரலை, ஆனா நெனச்சா வந்திருக்கலாம். இது மாதிரி ரொம்ப மெதுவா ஆனா உறுதியா நிகழ்கிற மாற்றத்துக்குப் பேரு தான் எவோலுஷன். அந்த மாற்றம் நிகழ்றத நம்மால உணர முடியாது. மாறிப் போனத மட்டும் தான் உணர முடியும்."

"சரி ம்யூட்டேஷன் பத்தி சொல்லு மாம்ஸ்"

"சரி, இப்போ இன்னொரு பையன எடுத்துக்கோ, அவன் 2007 டிசம்பர் 24 வரைக்கும் இருந்த நிலை வேற, அதுக்கு அப்புறம் இருந்த நிலை வேற. இதுக்கு முன்னாடி நைட்டு 11:30 மணிக்கு தான் சங்கத்திலேருந்து அவங்க வீட்டுக்குக் கிளம்புவான். ஆனா இப்போ, 10:15 கூட ரொம்ப லேட் ஆகிப் போச்சுனு சொல்றான். அது கூட பரவாயில்ல ஆண்டுக்கு ஒரு தடவை சங்கத்துல எல்லாரும் நம்ம தூத்துக்குடி கடற்கரையில சந்திக்கலாம்னு இருந்தா அந்த நாயி ஒரு மொக்கை காரணத்த சொல்லி வராம இருந்தான், அன்னிக்கு அந்த ஒரு நாறப்பயலத் தவிர எல்லோரும் இருந்தோம். அவனுக்கு 2007ல இப்போ தான் எல்லா நன்பர்களையும் பார்க்க வாய்ப்புன்னு தோனுச்சுன்னா வந்திருப்பான் இல்லையா. இது கூட பரவாயில்லை, நன்பர்கள் எவ்வ்ளோ சொல்லியும் சிக்கன் சாப்பிடாத நாயி, அன்னிக்கு மட்டும் "ஐ லவ் சிக்கன்"-னு டையலாக் விட்டு சாப்பிட்டிருக்கான். வீட்டுக்காக ஒரு வேலை செய்வானா இவன்? இப்போ என்னடான்னா நெல்லிக்காய் வாங்கிக் கொடுக்குறான், பாவாடை நாடா கோர்த்துக் கொடுக்குறான், லைனிங் க்ளாத் வாங்கிக் கொடுக்குறான், ஆனா எதையுமே அவனோட வீட்டுக்குப் பண்ணலை இந்த மாதிரியான மாற்றத்துக்குப் பேரு தான் ம்யூட்டேஷன். ஒரு குறிப்பிட்ட காரணத்தால உடனடியா நடக்கிற மாற்றம் தான் அது. அது எப்போ நடந்ததுன்னு தெளிவாவே தெரியும், காரணமும் எல்லாராலும் உணர முடியும்.

"இப்போ வித்யாசம் புரிஞ்சுதாடா?"

"ரொம்பத் தெளிவாவே புரிஞ்சுது, இது மாதிரி அடிக்கடி சந்தேகம் கேக்கிறேன், நீயும் இது மாதிரியே அடிக்கடி தீர்த்து வையி. நான் நளைக்கு கூப்பிடுறேன்"

தொடர்பு துண்டிக்கப்பட்டது.