Friday, February 22, 2008

A Long Day - 3

என் வாழ்வின் மிக நீளமான நாள் -3
தேர்வு அறைக்குள் நுழைந்தேன். இதற்கு முன்பு அட்மின்-ப்ளாக்கில் தான் தேர்வு எழுதுவோம். இப்போது புதிதாகக் கட்டப்பட்ட சிவில் டிப்பார்ட்மென்ட்டில் வைத்துத் தான் எழுத வேண்டும். தேர்வு அறையின் நான்காவது வரிசையின் இரண்டாவது இருக்கையில் அவள் இருந்தாள். இருவர் கண்களும் 2 வினாடிகள் சந்தித்துக் கொண்டன. பின்னர் பார்வையை விலக்கிவிட்டு இருக்கையை நோக்கிப் போனேன். தேர்வு எழுதும் டெஸ்க் சற்று சாய்வாக இருக்கும், அதை ட்ராயிங்க் போர்டாகவும் தேர்வு மேசையாகவும் பயன்படுத்துவோம். முன்னொரு முறை அதை நான் வேறு விதமாகவும் பயன்படுத்தியிருக்கிறேன்…

2002-ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் ஏதோ ஒரு நாளில் நடந்த ஒரு இம்சைத் தேர்வின் போது (பீரியாடிக் டெஸ்ட்டை நாங்கள் இப்படித் தான் சொல்வோம்) தான் அது நடந்தது. முந்தின வாரத்தில் தான் என் இதயத்தை சுக்கு நூறாக உடைத்திருந்தாள்; ஒரு வாரம் முழுதும் அதன் பின்னர் பேசவேயில்லை. (உலகின் மிகக் கொடுமையான விஷயம் மௌனம் தான்...) அந்தத் தேர்வு அறைக்கு சற்று முன்னரே வந்து விட்டேன்; யாரும் இல்லை என்பதை உறுதி செய்து விட்டு அவளுடைய எண் கொண்ட மேசையைத் தேடினேன். அவளுடைய எண் மனப்பாடமாய் இருந்தது. எனக்கு ஏனோ அன்று மட்டும் எல்லாமே நல்லதாகவே நடந்தது.

முதலில் அறையில் எந்தப் பயலும் இல்லை. (வழக்கமா எவனாவது ஒரு பழம் தேர்வு அறையில் உக்காந்து தேர்வுக்கு ஒரு மணி நேரத்துக்கு முந்தி கண்ணுல கொலை வெறியோட படிச்சுக்கிட்டிருப்பான்; டேய் இது வெறும் பீரியாடிக் டெஸ்ட் தான்டா! இதுக்குமா இவ்ளோ ரத்த வெறி..)

இரண்டாவது அவளுடைய எண் கொண்ட மேசை எந்தக் கீறலும் கிறுக்கலும் இல்லாமல் இருந்தது. பொதுவாக எந்தக் கல்லூரிக்கு நீங்கள் சென்றாலும் அங்கு உள்ள டெஸ்க்கில் கிறுக்கல் இல்லாமல் பார்க்க முடியாது. சினிமாப் பாடல்கள், காதல் கவிதைகள், பேனாவை வைத்து வரையப்பட்ட (கிறுக்கப்பட்ட) பெண்களின் படங்கள், அல்லது ஃபீல்ட் தியரியில் உள்ள சில சமன்பாடுகள் என்று ஏதாவது இருக்கும். நல்ல வேளை அதில் எதுவுமே இல்லை. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே என்னுடைய பென்சிலை எடுத்து (ரவியிடமிருந்து பிடுங்கப்பட்ட பென்சில் தான்.) டெஸ்க்கில் எழுத ஆரம்பித்தேன். ஒரே வரி தான். சொல்ல வந்தவற்றை சுருக்கமாகச் சொல்லியாகி விட்டது.

மீண்டும் யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து விட்டு என்னுடைய இருக்கையில் அமர்ந்து கொண்டேன். கேள்வித்தாள் கொடுக்க ஆரம்பித்தனர்.

நான் என்னுடைய தேர்வைத் தான் எப்போதோ எழுதிவிட்டேனே.

இரண்டரை மணி நேரத்தில் தேர்வு முடிந்து விட்டது. எல்லோரும் வெளியே போய்விட்டனர். நானும் வெளியேறினேன். அட்மின் ப்ளாக்கை விட்டு நன்பர்களுடன் வெளியே வந்த பின்னர் "டேய் பென்சில மறந்து வச்சிட்டு வந்துட்டேன், போய் எடுத்து வர்றேன்” என்று சொல்லிவிட்டு தேர்வு அறையை நோக்கிப் போனேன்.

உள்ளே என் கால்கள் என்னைக் கேளாமல் அவளுடைய இருக்கை நோக்கிச் சென்றது. அவளுடைய டெஸ்க்கைப் பார்த்தேன். உள்ளத்தில் ஏனோ மகிழ்ச்சி பொங்கியது.

போன வாரம் என் மனதை உடைத்த அவள் இம்முறை அவளுடைய மௌனத்தை உடைத்திருந்தாள். நான் கேட்ட கேள்விக்கு ஒரு பாசிட்டிவான பதிலைப் பென்சிலால் எழுதியிருந்தாள்.

எனக்கு வேறு ஒரு விஷயம் ஆச்சரியமாய் இருந்தது. நான் யாரும் இல்லாத நேரமாய்ப் பார்த்து தான் எழுதியிருந்தேன். இவள் எப்படி தேர்வு ஆறைக்குள் ஆசிரியர் கண்கொத்திப் பாம்பாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பென்சிலை வைத்து டெஸ்க்கில் எழுதினாள்?

பொதுவாக எல்லா வகுப்பிலும் ஒரு பத்து மாணவர்களாவது "பழம்" என்று அன்போடு அழைக்கப்படுவார்கள். எங்கள் வகுப்பில் இருந்த 12 பழங்களில் இவள் 12-வது பழம். இவளா ஆசிரியர் இருக்கும் போதே டெஸ்க்கில் எழுதினாள் என்று நினைக்கும் போது அவளுடைய தைரியத்தை நினைத்து ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை.

அட ஙொக்காமக்கா!!! இந்தப் பழத்துக்கு இம்புட்டு தைரியமா? என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே " பொத்" என்று ஏதோ விழுந்தது.

என்னுடைய டெஸ்க்கில் விடைத்தாளைத் தான் அந்த சூப்பர்வைசர் அப்படிப் போட்டிருந்தார்.
மீண்டும் 2004-க்கு திரும்பி வந்தேன்.

கேள்வித்தாளும் என்னுடைய டெஸ்க்கில் கிடந்தது. சே! தேர்வு அறையில் வந்து அமர்ந்த பின்னும் அவளை நினைத்துக் கொண்டிருக்கிறேனே?
தேர்வு எழுத வேண்டிய பாடம் மறந்து விட்டால் என்ன செய்வது? என்றெல்லாம் எண்ணம் வந்தது.
சரி. படித்தால் தானே மறந்து போவதற்கு?

கேள்வியைப் பார்க்காமலேயே பதில் எழுதத் தொடங்கினேன். (நான்கு ஆண்டுகளாக இதைத்தானே செய்து கொண்டிருக்கிறாய் என்று நீங்கள் கேட்பது புரிகிறது...) தேர்வு முடிய அரை மணி நேரம் இருக்கிறது. மெதுவாக அவளைத் திரும்பிப் பார்த்தேன். மீண்டும் இருவரது கண்களும் சந்திதன. சரி வெளியே கிளம்ப வேண்டியது தான் என்று முடிவு செய்து கொண்டு பேப்பரைக் கொடுத்து விட்டு முதல் ஆளாக வெளியேறினேன்.

நான் இதில் மட்டும் தான் முதல் மாணவன்.

தேர்வு அறைக்கு வெளியே வந்ததும் பி.டி சாரின் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மிக நல்ல மனிதர். மற்ற பி.டி ஆசிரியர்களைப் போல் அல்லாமல் எல்லா விதத்திலும் எல்லா மாணவரகளுக்கும் உதவி செய்வார். நான் மூன்றாமாண்டு இறுதியில் ஆர்மிக்கான இன்ட்டர்வியூ-வுக்குத் தயார் செய்த போது 100மீ ஓடுதல், கயிறு ஏறுதல், வெயிட்டைத் தூக்கிக் கொண்டு ஓடுதல் என்று எல்லாவற்றுக்கும் பயிற்சி கொடுத்தார். அது விடுமுறை நாட்கள் என்பதால் க்ரௌண்டில் நானும் அவரும் மட்டும் தான் இருப்போம். அது மட்டுமில்லாமல் நான்காமாண்டு ஃபீஸ் கட்ட வழியில்லாத போது சிறிது கடனும் கொடுத்தார்.

அவரிடம் நன்றி சொல்லிவிட்டு விடை பெறுவதற்காக அவரைத் தேடிச் சென்றேன். ஆனால் அவர் இல்லை. எல்லா அறையிலும் தேடினேன். இல்லை. மெக் டிப்பார்ட்மென்ட்டிலிருந்து வெளியேறினேன்.

மீண்டும் சிவில் பில்டிங்கைக் கடந்த போது...

அவள் வெளியே வந்து கொண்டிருந்தாள். ஒரு வினாடி அதிர்ந்து தான் போனேன். ஏனென்றால் மொக்கைத் தேர்வாக இருந்தாலும் தேர்வு முடிந்தது என்று மணி அடித்து, அங்குள்ள வாத்தியாருங்க வந்து ஆன்சர் பேப்பரப் புடுங்கி அனுப்பினால் தான் இவள் தேர்வு அறையை விட்டு வெளியே வருவாள். இன்னிக்கு என்னடான்னா தேர்வு முடிய 20 நிமிடம் இருக்கும் போதே வெளியே வந்துவிட்டாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். ஒரு ஏழு வினாடிகள் இருவரது கண்களும் சந்தித்துக் கொண்டன. ஏழு வினாடிகள் என்பது எவ்வளவு நீளமானது என்பது அன்று எனக்குப் புரிந்தது. பின்னர் அவள் தலையை குனிந்து கொண்டாள். குனிந்த தலையுடன் அவள் புன்னகைப்பது போலத் தோன்றியது. திருப்பிப் புன்னகைக்கலாம் என்று தோன்றிய எண்ணம் என் மேல் உதட்டுக்கு சற்று மேலே எங்கேயோ தொலைந்து போனது.

அவளுடைய முகத்தை கடைசியாக ஒரு முறை பார்த்துக் கொண்டேன். கல்லூரி வளாகத்திற்கு வெளியே வேன் ஸ்டான்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அங்கு தான் நன்பர்களுடன் லஞ்ச்.
இன்று இரண்டாம் பாதியில் முழுக்க முழுக்க ஆட்டோக்ராஃப், புகைப்ப்டம் எடுத்தல் என்று பொழுது போய் விடும். சரியாக 5 மணிக்கு திருநெல்வேலிக்குப் போக வேண்டும்.

லஞ்ச் முடிந்து திரும்பி வந்த போது எங்கள் டிப்பார்ட்மென்ட் சற்று கலகல்ப்பாக இருந்தது. நன்பர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன். மீதமிருந்த ஆட்டோகிராஃப்களையும் முடித்துக் கொடுத்தேன்.

கம்ப்யூட்டர் டிப்பார்ட்மென்ட்டுக்குப் போய் சீமா மேடத்திடம் நன்றி சொல்லிவிட்டு விடை பெற்று வரக் கிளம்பினேன். அவர் எனக்கு கூடப் பிறக்காத அக்கா. எனக்கு எவ்வளவு உதவிகள் செய்திருப்பார்கள் என்று கணக்கிட முடியாது. அவர் செய்த உதவிகளுக்கெல்லாம் என் வாழ்நாள் முழுவதிலும் அவருக்குக் கடமைப் பட்டிருக்கிறேன் என்று எனக்குத் தெரியும்.

அவரைச் சந்தித்தேன். விடை பெற்றுக் கிளம்பும் போது ஒரு ஃபைலைக் கொடுத்தார். இன்ட்டர்வியூவுக்குப் போகிறாய் அல்லவா? இதை வைத்துக் கொள் என்று சொல்லிக் கொண்டே விடை கொடுத்தார். கண்ணில் நன்றியோடு வெளியே வந்தேன்.

என்னைத் தேடி அங்கேயே வந்திருந்த ஜெஃபர்சன், "டேய் மாம்ஸ் ஒன்ன அத்தை தேடுறாடா, உடனே நம்ம டிப்பார்ட்மென்ட் போ" என்றான்.

பொய் சொல்கிறானோ என்று தோன்றினாலும் அது உண்மையாக இருக்கக் கூடாதா என்ற முட்டாள்த்தனமான எண்ணமும் வந்தது. இதயம் வேகமாக அடித்துக் கொள்ள என்னுடைய டிப்பார்ட்மென்ட் நோக்கிப் போனேன்.....

(நான்காம் பாகத்தில் தொடரும்...)

1 comment:

Unknown said...

mams athai deskla enna yaluthi irunthanu podavae illa pathiya........ secret maintain panriyakum..... adutha blogla atha podu mams blog padikachula yathayo miss panra mathiri irukkula.......